Homeசிறுகதைகள்மறைமுகம்

மறைமுகம்

உள்ளங்கைகளால் தாங்கி விரல்களால் அதனை மூடிவிடலாம்.காமாட்சியின் மடியில் இறந்து போன அவளதுகுழந்தை அப்படித்தான்கிடந்தது.புடவையால் மூடியிருந்த குழந்தையின் கைகளை பூநரம்பினைத் தூக்குவது போலத் தூக்கினாள். விரல்களின் ஓரத்தில் நகம்முளைக்கும்இடத்தில் தன் விரலை வைத்துத் தேய்த்தாள். குழந்தைஅசைவது போலத் தெரிந்தது.அதன்சொப்பு போன்ற சிறிய வாய் சற்றுத்திறந்திருந்தது. அதன் கீழ் சுண்டுவிரலை மட்டுமேவைத்து தொடும் அளவுக்கான இடத்தில் மெதுவாக காமாட்சி அழுத்தினாள். நெற்றியைத் தடவினாள். புருவத்தை நீவினாள். அதுமுடி இல்லாது சங்குபுஷ்பத்தின் நிறத்தில் இருந்தது. மூக்கினை மெதுவாக வருடிக் கொடுத்தாள். 

உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் தொட்டுத்தொட்டுப் பார்த்தாள். குளிர்ந்துதிருந்தது. காலை வரை குழந்தைக்கு உடல் சூடேறிக் கிடந்திருந்தது. திருகிக் கொண்டே இருந்தாள் குழந்தை. காமாட்சி பார்த்துக் கொண்டிருக்கவே தன்னை அதுவிடுவித்துக் கொண்டது. அழுகையின் நெடுந்துயரும் வாழ்வின் போதாமையும் அவளை குலையச் செய்துவிட்டன. குழந்தையின் ஆழ்ந்த உறக்கம் என்பதாய் தட்டிக் கொடுத்தபடி இருந்த காமாட்சியினை தைலா பாட்டி தான் ஆற்றினாள். மடியை விட்டு குழந்தையை காமாட்சி இறக்கி வைக்கவில்லை. யாரோ பிடுங்கிவிடக் காத்திருக்கிறார்களோ என அஞ்சினாள். நினைப்பாள். அழுவாள். பொத்தி வைத்துக் கொள்வாள். ஒருசமயம்தன் மார்புக்கு குழந்தையைக் கொண்டு போனாள். மார்பு கனத்து இருந்தது.“ஐயோ!. போதும்டி… அதைக்கீழ போடு”சொல்லும்போது  தைலா பாட்டிக்கு அழுகை வந்தது.

“அதுக்கு பசிக்குமே பாட்டி”

அறையின் ஓரத்தில் கூட்டத்தில்ஒடுங்கியிருந்த சீதை சொன்னாள். “இனி தெய்வம் பாத்துக்கும் காமாட்சி. அங்க உன் குழந்தைக்கு வயிறு நிறைஞ்சிருக்கும்”

சீதைக்குஇரு குழந்தைகளை கனத்த மார்புகளோடு பறிகொடுத்து சமாதானம் ஆனஅனுபவம் உண்டு.

குழந்தை மார்பினருகே சொருகிக்கிடந்தது. காமாட்சிக்குத் தன் கைகள் பட்ட இடங்களில் எல்லாம் அழுந்தியதால்குழந்தைக்கு உஷ்ணம் ஏறியிருந்தாற்போல் பட்டது.

“நாளைக்கு உடம்பு முழுசும் உஷ்ணமா இருக்கும் இல்லையா பாட்டி”

தைலா பாட்டி “இல்லடி..குழந்தையை நெருப்புக்கு கொடுக்கறதில்லேயே… பூமி எடுத்துக்கும்”

“திரும்பத் தருமா பாட்டி?”

“ஆமாடி…திரும்பத் தரும். வயசென்ன ஆச்சு உனக்கு? பால கனகனுக்கும் என்ன அறுபது வயசா?”

என்றவள், “பால கனகன் வந்தானா?” என்றாள் வாசலைக் குறிப்பாகப் பார்த்து.

வாசலில் ஆட்கள் நிற்பதற்கான அசைவுகள் தெரிந்தன. குரல் எதுவும் பதிலாய் வரவில்லை. வாசலில் கூட்டத்தோடு நிற்கும் மாமனார் வெங்கடாசலம் மனதுக்குள் என்னென்ன நினைத்துக் கொண்டிருப்பார் என்று காமாட்சிக்குத் தெரிந்தது.

“தாக்கல் கொண்டு போன ஆளு எப்படியும் கூட்டிட்டு வந்துடுவான்” என்றாள் தைலா பாட்டி. சொல்லியபடியே அங்கேயே ஒருகையினை தலைக்கு வைத்து படுத்துக் கொண்டாள். நீளமான கொட்டாவி விட்டாள். ‘முருகா…!அப்பனே…!” என்றாள்.இரவின் நடுநேரத்திற்குப் பின் உறங்கிப்போனாள். சீதையும் மூலையில் சுருண்டு கொண்டாள். அவள் வயதுக்கு வீட்டைத் தாண்டிய மற்றொரு இடத்தில் இப்படி சுருண்டு கொள்ளவே பழகியிருந்ததாள். தைலா பாட்டிக்கு அவளதுவயது ஒரு அனுசரணை.அது அவளை எந்த இடமானாலும் கால் நீட்ட வைத்திருந்தது. அந்த அறையின் கஜலட்சுமிவிளக்கின் ஒற்றை ஒளியில் தைலா பாட்டி பேருருவ நிழலாய் சுவற்றில் தெரிந்தாள்.

பாலகனகன்இப்படித் தான். முப்பது நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்த போதும் பாலகனகனுக்குத் தகவல் அனுப்பினார் வெங்கடாசலம். தகவல் கொண்டு அரிக்கேன் விளக்கோடு இரவோடு இரவாக வேகமாகப் போனவர் மறுநாள் மதியத்தில் அணைந்த விளக்கோடு சோர்ந்து வந்தார், “ரொம்பக் கெடுபிடி… ஒவ்வொரு இடத்துலேயும் நிறுத்தி என்னென்னவோ விசாரிக்கறாங்க. புதுசாவந்த அதிகாரியோட உத்தரவாம். நம்ம பக்கம் இந்த அரசாங்கத்துக்கு எதிரா ஏதோ கூட்டம் சேர்ந்துருக்காங்களாம்.பாரதத் தாய்னு ஒருரகசிய சங்கம் கூட ஆரம்பிச்சாச்சாம். சங்கத்தை பத்தி என்ன தெரியும்னு எங்கிட்ட கேக்கறான் போலீஸ்காரன். நான் என்னத்தக் கண்டேன்?” இப்படி சொல்லும்போது அவன் குரல் ரகசியம் போல் ஆனது. மாமனார்வெங்கடாசலத்துக்கு பொறுமை இல்லை.

“கனகனைப் பாத்தியா இல்லையா?”

காமாட்சி அந்த நபர் சொல்லப்போகும் பதிலுக்காய் வாசலையே பார்த்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த இடம் துணியால் மறைக்கப்பட்டிருந்தது.அவளுடைய இடத்தில் இருந்து எதைத் துணியால் பார்த்தாலும் எல்லாமேபனியால் போர்த்தியது போலவே தெரிந்தது.பக்கத்து வீடுகளில் இருந்து  தைலா பாட்டியும், சீதையும் எப்போதேனும் தள்ளி வந்து நின்று பார்த்துக் கொள்வார்கள்.குழந்தைக்கு பெயர் வைக்கும் சடங்கு நடப்பது வரை காமாட்சியையும் குழந்தையையும் அவர்கள்தொட சட்டத் திட்டங்கள் சொல்லவில்லை.

இழந்த அம்மாவை நினைத்து அப்போதெல்லாம் காமாட்சிக்கு அழுகை வரும்.அம்மாவின் முகம் நினைவின் மேல் எழும்பும். அம்மாவின் கண்கள் இடுங்கியவை. காமாட்சியைப் பார்ப்பதும் வெயிலைப் பார்ப்பதும் ஒன்றென நினைக்கும் போன்ற கண்கள் அவை. அந்தக் கண்களை அவள் குழந்தையினிடத்தில் தேடினாள். குழந்தையோ எப்போதும் தூங்கிக் கொண்டே இருந்தது. பால் கொடுத்தால் பாதியைத்திருப்பி வெளியில் அனுப்பியது. மாமனாரிடம் இதைப் பற்றி சொல்ல காமாட்சிக்கு கூச்சம்.

“எதாவது வேணுமாம்மா” என்பார் தன்னை ஒடுக்கித் தள்ளி நின்றபடிக்கு. 

பதில் கூட சொல்ல முடியாமல் தவிப்பாள் காமாட்சி.

அவளுக்கு குடிக்கநீர் தேவைப்படும். அது கூட பரவாயில்லை தாங்கிக் கொள்ளலாம். சில நேரங்களில் குழந்தை தூங்கிக் கொண்டே இருந்தால், மார்பு கட்டிக் கொள்ளும். அதன் வலி அவள் முன்பு அறியாதது. அவளுடையபதினாறுவருட கால வாழ்க்கையில்இதுவரைஎந்த வலியையும் தான்  கண்டதில்லை என்று நினைத்துக் கொண்டாள். ஆனால் அவள் அறியாமேலேயே ஒவ்வொரு வலிகளாய் நினைவுக்கு வந்து கொண்டே இருந்தன.

அவளுடையஅம்மாமரணித்ததும்தன்னுடைய வீட்டில் மொத்த சமையலையும் காமாட்சி தான் செய்தாள். அம்மா சொல்லித் தந்து செய்ததில்லை. ஆகையால் அடுப்பில் சுட்டுக் கொள்வாள். கரிப்பொறி கண்ணில் விழும்.விறகு உடைக்கும்போது சிராய்க்கும்.இவைஎல்லாம் பெண்களுக்கே உண்டான அன்றாட வலிகள் என்று சொல்லக் கேட்டுப் பழகியிருந்தாள். அதனாலேயே அவள் இதனை வலி என்று எடுத்துக் கொள்வதில்லை.வழக்கம் என்று பழக்கப்படுத்தியிருந்தாள். இது போன்ற பல வலிகளைத் தாங்குகிறபோது மனனம் போல் சொல்லிக் கொள்வாள், “நமக்கு மட்டுமா என்ன?”. அம்மாவுக்கு இந்த வலிகள் இருந்திருக்குமா? என்று கேட்டுக்கொள்ள அவள் இல்லாதது தான் ஒவ்வொரு முறையும் காமாட்சிக்கு பெருந்துக்கமாக எழும். 

இப்போதெல்லாம் இந்த மார்பு கனத்து மூச்சு விடவும்,கைககளைத் தூக்கவும் படும்பாடு தான் அவளுக்குத் தாங்க முடியாததாக இருந்தது.அதுவும் போக ஒரே இடத்தில் படுத்துக் கிடந்தது கால்களின் ஆடுசதைகளில் எதிர்பாராத நேரத்தின்போது வெட்டிப் பிடிக்கிறது. பக்கத்தில் துணைக்கு போடப்பட்டிருந்தபழஞ்சேலையை சுருட்டி வாயில் வைத்து வலி பொறுக்கப் பழகியிருந்தாள்.

குழந்தை பிறந்த செய்தியை சொல்வதற்கு பாலகனகனைத் தேடிப் போன ஆள் வந்திருந்த அந்த மதிய நேரத்தில் கூடஅந்த ஆடுகால் சதைவலி வலித்துஅடங்கியிருந்தது. தாக்கல் சொன்ன ஆள் சொல்லிக் கொண்டிருந்தார்.

“கனகனை எங்கேயுமே காணோம்!.செங்குளம் சீனிவாசனோட யாரோ ஸ்ரீசைலம் தீர்த்தக்கட்டத்துல பாத்துருக்கங்கன்னு அங்க போனேன்…அங்கமனுஷ சுவடே இல்லையே”

“இவனுக்கு ஏண்டா இப்படி புத்தி போகுது.இப்ப தானே பூங்கோட்டை காட்டு இலாகால வேலை கிடைச்சது. வேலையை விட்டுட்டு ராவும் பகலுமா எங்கடாப் போறான்?எதுக்கு இவன் யார் யாரோடையே சுத்தறான்?”

வெங்கடாசலத்துக்கும், தாக்கல் சொல்லப் போனவருக்கும் ஒரே சந்தேகம் தான். இருவரும்வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

பாலகனகன் வரவேயில்லை. கனகனைத் தேடுவதற்காக வெங்காடசலம் அனுப்பிய ஒவ்வொருவரும் விதவிதமானத் தகவல்களை மட்டும் கொண்டு வந்து சேர்த்தனர். கல்கத்தாவில் இருக்கிறான் என்றார்கள், புதுச்சேரிக்குபோனதாகப்பேசிக்கொண்டார்கள்.தென்காசி விசுவநாதர் கோயில் வாசலில் பார்த்ததாக ஒருவர் வீடு தேடி வந்து சொன்னார். வெங்கடாசலம்உள்ளுக்குள் உடைந்திருந்தார். அதிகம்பேசியிராத காமாட்சியிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் அவளின் அமைதியை எதிரொலித்தார்.

ஊரில் நிகழ்வுகளுக்கு பஞ்சமில்லை.சிதம்பரம் பிள்ளையையும், சுப்ரமணிய சிவாவையும்,மக்கள் முன்பாகவே கைது செய்து அழைத்துப் போனார்கள். திருநெல்வேலி ஜில்லா முழுவதும் பற்றிஎரிந்தது. அதன் தாக்கம் குக்கிராமங்களைக் கூட சூடாக்கியிருந்தது. இரவுகளில் சுவர்களில் பற்ற வைத்த தீ பகலில் எழுத்துகளாய் ஒளிர்ந்தது. “சி சு வை விடுதலை செய்” “பறங்கியனே சிதறிப் போ” என்றன சுவர்கள்.

காமாட்சிக்குஇவற்றை செய்திகளாக சொல்வார் யாருமில்லை. அவள் உணர்ந்த உலகங்களில் ஒன்று அருகில் கிடந்தது. அவள் அறியக் காத்திருக்கும் உலகம் ஊர்ஊராய் சுற்றிக் கொண்டிருந்தது.ஒவ்வொருநாளும் அமைதியாய் உறங்கும் குழந்தையிடம் “அப்பா சீக்கிரமா உன்னைப் பாக்க வந்துடுவாரு.உன்னோட நாசியப் பாக்கறதுக்கு உன் அப்பா மாதிரியே இருக்குன்னுஉன் தாத்தாசொல்றாரே…எனக்கென்ன தெரியும்?. உங்கப்பா முகத்தை சரியாவே நான் பார்த்தில்லையே!. வந்தாலும் அவர் முகம் பாக்கறதுனா கூச்சம் பிடுங்கித் தின்னும். அவர் கையில நீ இருக்கும்போது தான் உன்னைப்பாக்கற மாதிரி அவரைப் பாக்கணும்”என்று சிரிப்பாள். அது போன்ற சிரிப்புகள் எப்போதும் அவளுக்கு அந்தரத்திலேயே புகைந்து விடக்கூடியவை.

குழந்தையின்மேட்டு நெற்றியைத் தடவியபடிக்கு, ‘உன் அப்பா ரொம்ப புத்திசாலியாக்கும். அவர் உனக்கு இராமாயணமும், பாரதமும்சொல்வாரு. அதுல சொல்ற தர்மம் என்னன்னு உனக்கு சொல்லிக் கொடுப்பார். அப்படி அவர் சொல்லும்போது நானும் கேட்டுப்பேன்…”

இப்படிஏதேனும் அவள் பேசுகிறபோது குழந்தைஉறக்கத்தில்சிரிக்கும். அவள்பாலகனகனைப் போல் சிரிப்பதாக நினைத்துக் கொள்வாள்.“உங்க அப்பாவோட சிரிப்பு கூட இப்படித் தான் இருக்கும் போல.தள்ளி நின்னு தான்பாத்துருக்கேன். இப்பல்லாம் அவர் சிரிக்கறதே இல்ல.ஏதோ யோசனையிலேயே இருக்கார். பாவம் அவருக்குள்ள என்னவோ? என்னை மாதிரி எதுவுமே தெரியாத பொண்ணுகிட்ட என்ன சொல்ல முடியும் அவருக்கு?சொன்னாத் தான் எனக்குப்புரியுமா? வெள்ளைக்காரன் இன்னிக்கு நேத்தா இருக்கான். நான்பிறக்கறதுக்கு முன்னாடியே இருக்கான். இனிமேலும் இருப்பானே…!அவனைநினைச்சு நாம ஏன் தவிக்கணும்? உங்க அப்பாவுக்கு வெள்ளைக்காரங்களப் பத்திபேச்சை எடுத்தாலேஎவ்வளவு கோபம் வருது?”

“…அதுவும் நீ பொறக்கறதுக்கு பத்து நாளைக்கு முன்னாடி, அன்னிக்கு முழு அமாவாசை. இப்படித் தான் நான் அவரை எதிர்பார்த்து உக்காந்துருந்தேன். விளக்கு வச்சு ரொம்ப நேரம் ஆயாச்சு.எனக்கு ஆயாசமா இருந்தது.உன் அப்பா எப்ப வேணாலும் வருவாரே. காத்துட்டு இருந்தேன்.வெளிவாசல்படிக்கு பக்கத்துல உன் தாத்தா வேப்பிலையை தீயில போட்டு வாட்டிட்டு இருந்தாரு. பூச்சி வராது இல்லையா?.எனக்கு அந்த நாத்தம் குடலைப் பிடுங்கும். பாவம் நீஉள்ள இருக்கும்போது உனக்கு அந்த நாத்தம் பிடிக்கலையோ என்னவோ, வாயால வந்துடும். உன் தாத்தாக் கிட்ட சொல்ல முடியுமா என்னால.புடவையைமூக்குல வச்சு அழுத்திட்டு உக்காந்துருந்தேன். உன்னோட அப்பா வந்தார்.

எங்க ஊர் சிவன் கோயில்ல சன்னதியில கால பைரவர் சிலை ஒண்ணு உண்டு.சாயந்திர நேரம் ஒரே ஒரு விளக்குல அவர் முகம் அப்படியே நம்மள குத்தற மாதிரிப் பாக்கும். வாயோரம் ரெண்டு பல் மட்டும் தனியாத் தெரியும். தப்பு பண்றவங்கள அழைச்சிட்டுப் போய்அந்த சன்னதில தான் சத்தியம் வாங்குவாங்க. தப்புபண்ணுணவன்பொய் சத்தியம் பண்ணினா கால பைரவர் பல் அவனைக் குத்திக் கிழிச்சிடும். திருடினவன்லாம் பொய் சொல்லி அன்னிக்கே இரத்தம் வெளியேறி செத்துப் போயிருக்காங்க. ஐயோ ரொம்ப பயங்கரம்.குழந்தை நீ!.உன்கிட்ட சொல்றேனே இதை. ஆனா பயப்படாத…நீ ஒண்ணும் தப்பு பண்ணலியே. நான் உன்னைக் கூட்டிட்டுப் போறேன். ஆங்! என்ன சொன்னேன்? கால பைரவர் மாதிரி தான் உங்கப்பா வீட்டுக்குள்ள நுழைஞ்சார். புஸ்புஸ்னுஒரே மூச்சு சத்தம். உன் தாத்தா மெல்ல வந்து உங்கப்பா பேர் சொல்லி… என்ன ஆச்சுன்னு கேட்டார்?”

பால கனகனுக்கு இந்தியா என்பதை விட பாரதம் என்று சொல்ல வேண்டும். பாரதம் இராமனின் தம்பியான பரதனின் தேசம் என்பான். இராமனின் ஆட்சியின் கீழ் பரதனின் மேற்பார்வையில் தான் இயங்குகிறது என திடமென நம்புகிறவன். இந்த பாரதத்தை இராமர் வழி வந்தவர்களே ஆளவேண்டும் என்பான்.துன்பத்தில் உழன்று தன்னையே காப்பாற்றிக்கொள்ள வழியில்லாத ஒருவரைத் தெய்வமாகக் கொண்டாடுபவர்கள்எல்லாம்இந்தநாட்டின் நரம்புக்குள் விஷமாய் புகுந்திருக்கிறார்கள் என்று கூச்சலிடுவான்.

தொழுவத்தில் கட்டப்பட்டிருக்கும் பசுமாடுகளின் முன்பு ஒவ்வொரு முறையும் அவன் ஏதோ முணுமுணுப்பதை காமாட்சி பார்ப்பாள். அவனறியாமல் அவன் முகம் பார்க்க அவள் உருவாக்கியிருக்கும் சொற்ப தருணங்கள் அவை. ஆனால்அவன் முகம் அப்போது அவள்விரும்பியபடியாகஇல்லாமல்அவளுக்கு அச்சத்தைத் தருவதாகவே இருந்தது.

அது போன்ற முகத்தைத் தான் அவள் அன்று இரவும் கண்டாள். “ஏண்டா கனகா… என்னாச்சு?” என்று பலமுறை வெங்கடாசலம் கேட்க வேண்டியிருந்தது.

பால கனகன் ஒன்றும் பேசவில்லை. “சீக்கிரத்துல எல்லாத்துக்கும் முடிவு வரத் தான் போகுது” என்று மட்டும் சொன்னான். அவன் சொன்ன தொனியில் இருந்த உறுதியில் காமாட்சிக்கு அச்சத்துக்கு பதில் தைரியம் தான்வந்தது. “எல்லாம்சரியாகிவிடும்” என்று கனகனே சொன்னது அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.எல்லாம் சரியானால் கனகன் மனம் அமைதியாகி அவளை நாடி வருவான் என்று நிம்மதிப்பட்டுக் கொண்டாள்.

கனகன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். அவனுக்கு பல கடிதங்கள் வந்தன.அவற்றில் ஒரு எழுத்துக் கூட காமாட்சிக்கும் வெங்கடாசலத்துக்கும் புரியாது.புரிகிறதமிழ் எழுத்துகளின் அர்த்தம் விளங்காது. அவை ஒரு ஒலிக்கோர்வை போன்ற பொருள் ஏற்படுத்துபவை.கடிதங்கள்வரும் நாட்களில் இரவு முழுவதும் அதைக் கையில் வைத்தபடிக்கு கனகன் அமர்ந்திருப்பான். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவனாய் சரசரவென தாளில் எழுதுவான்.விளக்கின் வெளிச்சம் அவன் கடிதத்துக்கு மாத்திரமே பொருள் கொடுக்கும். நடுவில்கனகனுக்கு விக்கலோ, இருமலோ வராதா…என்று ஏங்கிக் கிடப்பாள் காமாட்சி. கையருகில் தண்ணீர் சொம்பினை வைத்துக் கொண்டு இருளில் புதையும் அவன் முகம் பார்த்துக் கிடப்பாள். ‘இன்று குழந்தை வயிற்றை உதைத்தது’என்றுசொல்ல வேண்டுமாய் அவளுக்குத் தோன்றும். கனகனின்இருள்முகம் கொடுக்கும் தீவிரத்தில் அவள் மௌனமாவாள்.

காமாட்சிக்கு உலுக்கிப் போட்டது.எங்கோ நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. விருட்டென்றுசொடுக்கி அமர்ந்தாள். குழந்தைமடியில் அதே கிடப்பாய்க்கிடந்தது. அதன் மூக்கின் மேல் ஒரு “ஈ” அமர வந்ததை விரட்டினாள். குழந்தை கனத்திருந்தது. விறைத்து மரக்கட்டை போல் இறுகியிருந்தது. 

அதன் மென்மையான சிறு முடிகளைத் தடவித் தந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் இழக்கப்போகும்குழந்தையிடம் கடைசியாக என்ன சொல்வதென்று அவளால் நிதானிக்க முடியவில்லை.அதையேப் பார்த்தபடி இருந்தாள். தனது ஆன்மாவின் மொழியைஒலியால் உணர்ந்த ஒரே ஜீவனும் தன்னை விட்டு விலகப்போவதை அவள் உள்வாங்கத் துணிந்தாள். கண்ணீர் பெருக்கெடுத்தது.அதன் அழுத்தம் சொல்சொல்லாய் அவளுள் எழுந்து வந்தது. 

“உன் அப்பா உன்னை ஒரு தரம் பாக்கணும்… நீ போய் அவரைக் கூட்டிட்டு வர மாட்டியா செல்லமே…! நீ இல்லாம நான் வெத்து ஜடமாப் படற பாட்டை உன்னோட அப்பா பாக்கணும். உன்னோட ஒவ்வொரு அசைவையும் அவருக்கு நான் சொல்லணும். என் பக்கத்துல நீ கிடந்தத விரல்விரலா உன் ஸ்பரிசத்தை நான் உள்வாங்கினத உன் அப்பாக்கிட்ட சொல்லணும். அவருக்குத் தெரியாத உன்னோட சிரிப்பு எப்படியிருக்கும்னு அவர்கிட்ட நான் பேசணும். என் குழந்தையை நான் பாக்கலைன்னு அவர் ஏங்கித் தவிக்கும்போதெல்லாம், அவரோட ஏக்கத்தை நான் கவனிக்கனும்.அவர் தத்தளிச்சு மருகனும்.  ஒருமுறை கூட பாத்திராத உன்னோட கண்களை அவருக்கு நான் நினைவுபடுத்திட்டேஇருக்கணும்.நீயும் நானும் மட்டுமே அனுபவிச்ச துன்பத்தையும்சொல்லியழணும்…” காமாட்சியின்மனம் பேசிப்பேசி மோதி நின்றது. அவளது முகம் அறையில் புகுந்த நிலவின் ஒளியில் செம்மை பூத்திருந்தது.

பாலகனகனை வரவழைக்க ஒவ்வொரு இடமாக அனுப்பிய அனைவரும் செய்தியும், கனகனுமற்றும் திரும்பினார்கள். பாலகனகன் வரவேயில்லை. வந்திருந்து தலைகாட்டியவர்கள் கனகன் வராதது குறித்த குற்றச்சாட்டை புலம்பலாகவும் விரக்தியாகவும் பேசித் தீர்த்தனர். வெங்கடாசலம்தன் பேத்தியின் சடங்கினை செய்வதற்கு மகன் இருந்தும் இல்லாத நிலையை மனதினுள் அழுத்திக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்கள் அவர் முகம் பார்த்துக் காத்திருந்தனர். தைலா பாட்டி வழியாக என்ன செய்யலாம் என்று காமாட்சியிடம் கேட்டார்.

காமாட்சி எப்படியேனும் பாலகனகன் வந்துவிடுவான் என்று வைத்திருந்த உறுதியைத் தளறவிட்டாள். குழந்தையைக் கையில் எடுத்தாள். “உன்னாலும் அவரை அழைத்துக் கொண்டு வர இயலவில்லைஎன்றால் உன்னைப் பார்க்காமல் அவர் வாழ்ந்து கழிப்பது தான் சரி’ என்றாள் அதன் காதினுள். அதன் நெற்றியில் உதடு பதித்தாள். வெங்கடாசலம் அமைதியை உடைத்து  அரற்றினார்.

குழந்தை மண்ணின் பாகமாய் ஆனது.

வெற்றுத் தரையில் பகலிலும் குழந்தை நினைவாய் ஒளிர்ந்த விளக்கின் நிழலைப் பார்த்தபடி காமாட்சி கிடந்தாள். நிழலின் அசைவு அவளுக்கு குழந்தையின் அசைவாக இருந்தது.

குழந்தை போன இரண்டாம் நாள் வாசலில் அன்னியர்களின் பேச்சரவம் கேட்பதை ஒரு ஜடத்தன்மையோடு கேட்டுக் கொண்டிருந்தாள். எந்த ஒலியும் அவளுள் புகவில்லை.

வாசலில்அவர்கள்நின்றிருந்தார்கள்.ஆங்கிலேயர்கள் இருவர், நான்கு போலீஸ்காரர்கள். வெங்கடாசலத்தின் கால்கள் ஆடின. இத்தனை நெருக்கத்தில் அவர் தெய்வத்தைப் பார்த்திருக்கிறார்.தினமும் ஆலமரத்து பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை போடும்போது கண்டிருக்கிறார்.போலீசைப் பார்த்ததில்லை.

“யார் வேணும்?” என்று கேட்க வேண்டும்.

நாக்குப் புரளவில்லை.

வநதவர்கள்மிகக் கடுமையான முகபாவம் கொண்டிருந்தனர்.

“பாலகனகன் வீடு இது தானே?”

காமாட்சிக்கு இனி தனக்கு வீட்டினுள் காரியம் இல்லை என்று முடிவு கொண்டு கூடத்து இருளில் வந்து நின்றாள். அவள் அசைவை கண்டுகொண்டனர் வந்திருந்தவர்கள்.

“அது பாலகனகனின் மனைவியா?” என்று ஆங்கிலத்தில் அதிகாரி போல் இருந்த ஆங்கிலேயர்ஒருவர் கேட்க, போலிஸ் அதனைத் தமிழில் வெங்கடாசலத்திடம் சொன்னார்.

ஆமாம் என்று தலையாட்டினார் வெங்கடாசலம்.

“என் கனகனுக்கு என்ன ஆச்சு? வயித்துல புளி கரைக்குதே”

“நாங்க வீட்டை சோதனை பண்ணனும்”என்றார்கள் வந்தவர்கள்.

வெங்கடாசலம்சட்டென்று குறுக்கேப் போய் நின்றுகொண்டார்.

“குழந்தையை பறிகொடுத்து இன்னும்பத்தாம் நாள் காரியம் கூட ஆகல.கனகனோட குழந்தை” என்றார். ஆங்கிலேயே அதிகாரியிடம் மொழிபெயர்க்கப்பட்டது. அவர் முகம் இறுகித் தளர்ந்தது.

“உங்கள் மகன் பாலகனகன்  இந்த ஜில்லா கலெக்டரை ஷூட் பண்ணிட்டான்” என்றார்ஆங்கிலேயர். அவர் குரல் பதற்றமற்று கூர்மை கொண்டிருந்தது.

அதுவும் மொழிபெயர்க்கப்பட்டது. வெங்கடாசலம் அப்படியே நின்றார்.பதிலாய் அவரின் மேல்துண்டு மட்டும் காற்றில் ஆடி நழுவியது.

காமாட்சி தன்னருகில் இருந்த சுவரைப் பிடித்துக் கொண்டாள்.

“அவன் இப்ப எங்கே?” என்றார் வெங்கடாசலம் கம்மிய குரலில்.

ஆங்கிலேயர் காமாட்சி இருக்கும்திசையைப்பார்த்தார்.

“அவனும்அதே துப்பாக்கியால் இறந்து போனான்”

“தற்கொலை” என்றார்ஆங்கிலேயர்.

வெங்கடாசலம் அப்படியே அமர்ந்தார். தலையில் பட்பட்டென்று அடித்துக் கொண்டார்.

காமாட்சி உள்ளுக்குள் உடைபட்டுத்திணறினாள். கண்கள் அலைந்தன. வியர்த்தது. சமநிலைக்கு முயற்சி செய்து அப்படியே தரையில்கவிழ்ந்தாள். வீட்டுக்குள் ஏறும் பூட்ஸின் கால்கள் மட்டும் அவளுக்கு சன்னமாய்க்கேட்டது.

தங்களுடன் வரவேண்டுமாய் வெங்கடாசலத்தை போலிஸ் அழைத்தது. ‘இது என் மகன் பால கனகன் தான்’ என்பதான ஒப்புதல் கையொப்பம் கேட்டது. வெங்கடாசலம் நடுங்கும் விரல்களால் முடியாது என்று கையசைத்தார். குரலில்மட்டும் உறுதி இருந்தது.“அவன் என் மகனே இல்ல… அவன் குழந்தை பிறந்ததும், இறந்ததும் தெரியாமலேயே போய்ச் சேந்துட்டான்… அவனும் அனாதையா போகட்டும்.நான் அவனைப்பாக்கக்கூடவரமாட்டேன்” என்றார். காமாட்சி தன்னுணர்வு பெறுகையில் தைலா பாட்டி மட்டும்அறையில் இருந்தாள். ஏற்றிய விளக்கு ஒற்றையாய் அறையில் எரிந்து கொண்டிருந்தது.

“தண்ணி குடி காமாட்சி” என்று நீரைக் கொடுத்தாள். முழுவதுமாய் குடித்துத் தீர்த்தாள் காமாட்சி.

“கனகன் தன்னோட வாயில துப்பாக்கியை வச்சு சுட்டுக்கிட்டானாம்” என்றவள்கம்மிய குரலில் தொடர்ந்தாள். “மனசத் தேத்திக்கோ காமாட்சி. கனகனோடமுகம் சிதைஞ்சு போச்சாம்.. உன் மாமனார்இவன் தான் என் பிள்ளைனு அடையாளம் காட்ட மாட்டேன்னு சொல்லிட்டார்.அதனால நீ தான் இப்ப அவங்களோடப் போகணும்.”

காமாட்சி தைலா பாட்டி முடித்த பிறகும் அவள்குரலில் திரும்பத் திரும்ப அதனைக் கேட்டுக் கொண்டிருந்தாள். போலீஸ்காரர்கள் வீட்டினுள் இருந்த கடிதங்களையும், காகிதங்களையும் அள்ளிக்  கொண்டார்கள்.

கிராமத்தில் இருந்து இருபது மைல் தொலைவில் உள்ள திருநெல்வேலிக்கு முதன்முதலாய் இப்போது தான் வருகிறாள் காமாட்சி. உடன் வெங்கடாசலமும், தைலா பாட்டியும் நின்றிருந்தார்கள். கூட்டம் தள்ளி நின்றது. எல்லோர் முகங்களிலும் அச்சம் பரவிக் கிடந்தது. ஒரு கட்டடத்தின் வாசலில் சடலம் கிடத்தப்பட்டிருந்தது. அதன் கிடத்தலில் சர்வ அலட்சியம் தெரிந்தது. சடலத்துக்கு மூன்றடி தள்ளி மாட்டின் காய்ந்த சாணம் கிடந்தது. என்ன நிறமென்று அறிய முடியாத ஒரு துணி கொண்டு சடலத்தை மறைத்திருந்தனர். அதை மீறித் தெரியும் பாதங்களையும், விரல் நுனிகளையுமே கூட்டம் அச்சத்துடன பார்த்துக் கொண்டிருந்தது.

காமாட்சி எதையும் உள்வாங்காத ஒரு வெற்று பொம்மை போல் அருகில் போனாள். ஒரு போலீஸ்காரர் தள்ளி நின்று ஒரு குச்சியால் முகத்தில் இருந்த துணியை விலக்கினார். காமாட்சி மடங்கி அமர்ந்தாள். ஈக்கூட்டம் பறந்து போய் வந்தது.கரிய இரத்தம் கொத்தாய் கிடந்தது முகம் கொண்ட இடத்தில். அதன் நடுவே தெரிந்த அடையாளத்தைக் கொண்டு காமாட்சி கணவனைத் தேடினாள். பாலகனகனின் முகத்தை நினைவுக்கு இழுக்க வேண்டியிருந்தது. அது அவளுக்கு போக்குக் காட்டி எங்கோ போய் ஒளிந்து கொண்டது. மீண்டும் மீண்டும் அந்த முகத்தை இழுத்து வர முனைந்தாள். அது நழுவி இல்லாமல் ஆனது.

அவளுக்கு நினைவு பிறழ்வது போல் இருந்தது. வாய்த்தசந்தர்ப்பங்களை நினைவுக்குக்கொண்டு வந்து பார்த்தாள். அவன் முகம் மட்டும்நினைவில்எழும்பவேயில்லை. தன் முன் கிடந்த ஒருவனை கணவன் என்று எதைக் கொண்டு சொல்வதென்று அவள்  தடுமாறினாள்.

கூட்டம் கட்டுப்பாட்டை மீறி முன்னால் நகரத் தொடங்கியது. போலீஸ்காரன் வேகமாய் வந்து சடலத்தின் முகத்தை மூடினான்.

மூடிய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சி. அவளுக்கு அடையாளமாய்எதையும் காண இயலவில்லை. மெதுவாக நகர்ந்து அருகில் போனாள். சடலத்தின் துணியை விலக்கினாள். சற்றுகுனிந்து தன்னுடைய கண்ணை மூடிக்கொண்டாள். தனது உடமையின் வாசம் வருகிறதா என்று சுவாசத்திலே தேடினாள். அம்மாவின் சடலத்தில் மேல் எழுந்த மஞ்சளின் வாசம் வந்தது. பிறகுகுழந்தையின் பால் வாசம். அவளது அப்பாவின் மேல் இருந்து வீசிய பச்சிலை வாசமும் கூட வந்தது.அவளை விட்டு மரணித்தவர்களின் முகங்களுமே ஒன்றின்மேல் ஒன்றாய் எழுந்து வந்தன.

நினைவைஉலுக்கி முகத்தின்அருகில்போனாள். ஈக்கள் இடம் மாறி காமாட்சியின் மேல் ஊர்ந்தன. 

ஊர்ஜிதம் செய்ய இயலவில்லை.தடுமாற்றமாய் எழுந்தாள்.

‘தெரியவில்லை’ என்று நிதானமாய் சொன்னாள். வெங்கடாசலம் முகத்தில் ஒரு நொடி ஆசுவாசம் வந்து போனது. போலிஸ் அவரை இழுத்துக் கொண்டு போய் சடலத்தின் அருகில் நிறுத்தியது. இந்த முறை துணி வேகமாய் முகத்திலிருந்து போலிசாரால் இழுபட்டது. சில வினாடிகள் அந்த இடத்தில் காற்றில் ஒலி கொண்டிருந்தது. முகம் கோணக் கதறினார் வெங்கடாசலம்.

இனி எப்போதும் அவள் கணவனென உணரப்போவது குருதியின் துருப்பிடித்த இரும்பின் வாசமும், கருத்த சதைத் துணுக்கும் மட்டுமே என்பதை அறிந்தாள். 

தைலா பாட்டி காமாட்சியைக் கட்டிக் கொண்டாள். “உன் குழந்தைக்கிட்ட அவனும் போயிட்டாண்டி”

காமாட்சி தைலா பாட்டியிடம் இருந்து தன்னை விலக்கினாள்.

“போகட்டுமே பாட்டி.  தேடித் தேடிப் பாத்தேன் பாட்டி. அவரை எனக்குத் தெரியவேயில்ல…அவர் குழந்தை எதுன்னு அவருக்குத் தெரியாது…..”. அவளின் இலக்கற்ற பார்வை வானம் பெற்றுக் கொண்டிருந்தது. “தன்னோட குழந்தையைத் தேடித்தேடி அலைவார் இல்லையா பாட்டி?” 

காமாட்சியின் இயல்பிலில்லாத அந்த நேர முகத்தோற்றத்திற்கு தைலா பாட்டி ஈடு கொடுக்காது திரும்பினாள். 

Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments